உயிர் எழுத்து ஜூலை இதழ் கவிதைகள்

Posted: ஜூலை 3, 2011 in என் கவிதைகள்

1.
என் கவிதைகளில்
முகமற்ற யாரோ ஒருவன்
ரகசியமாக உலவிக் கொண்டிருப்பதாக
நீ சொல்கிறாய்.

என் கவிதைகளில் உள்ள
கடல்களில்
படகுச் சவாரி
மேற்கொள்ளும் உல்லாச பயணியாக
இருக்கலாம்.
அல்லது மீனவனாகவும்.

31வது பக்க கவிதையிலுள்ள
மலை உச்சியில் வசிக்கும்
ஆதி மனிதனாககூட இருக்கலாம்.

ஒருவேளை மதியகாட்சி
டிக்கட் கிடைக்காமல்
சும்மா எட்டிப் பார்க்க வந்திருப்பானோ?

என் கவிதைகளின்
தோற்றுவாய்கள்
மிகவும் குறுகலாக இருப்பதாக
அவன் முறையிடுகிறான்.

என் கவிதைகளில் வசிப்பது
மிகவும் கடினமானதெனவும்.

என் கவிதைகளில் மலர்ந்திருக்கும்
ஒரேயொரு நித்ய கல்யாணி பூவை
அவன் எதிர்கொள்ளும் போது
அவனிடம் பதற்றங்கள் கூடுகிறது.

பிறகு வேறொரு கவிதையில்
பெய்யும் மழையில்
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான்.

இப்போது
அவன் பொருட்டு
பெய்கிறது
எனது எல்லா கவிதைகளிலும்
பெருமழை.

———————

2.
வழமையான ஒரு திங்கள் கிழமை அன்று
எந்த ஆரவாரமும் இன்றி
பூத்தது
பொழுது சாயும் போது
அந்த
பெயரற்ற மலர்.

கீழ்வானமும்
கடலும்
கலந்தார் போலிருந்த
அதன் வர்ணமோ
இதிகாச மீன்காரியிடமிருந்து
பெற்று வந்தது போலிருந்த
அதன் வாசமோ
விசேஷமாக
யாருடைய கவனத்தையும் கவரவில்லை.

சில நூறாண்டுகள்
வேர் பிடித்து
வளர்ந்து மலர்ந்த
அதன் தொன்மை
குறித்து
யாரிடமும் எந்த வியப்போ
விசனமோ இல்லை.

அது வெளியட காத்திருந்த ரகசியங்கள்
யாருக்கும் எந்த பதற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை.

அதன் பிறகு வந்து போன
எந்த திங்கள் கிழமையிலும்
பூக்கவில்லை
அது போல ஒரு மலர்.
—————————

3.
வெள்ளை
நீலம்
பச்சை
இளஞ்சிவப்பு
என்று எல்லா நிறங்களிலும்
வரையப்பட்ட
காகங்களை
ஒவ்வொன்றாய்
பறக்கவிட்ட பிறகு
அவன் மெதுவாக
வரையத் தொடங்குகிறான்,
காகிதத்திலிருந்து
விடுபட முடியாத
கறுப்பு நிற காகத்தை.
—————————–
4.
எல்லா பொம்மைகளும்
சலித்த பிறகு
அவனுக்கு
ஒரு கடவுளை பரிசளிக்கிறேன்.

கடவுள் உருவாக்கித் தரும்
பிரபஞ்சத்தில்
அவன் பொருட்டு பெய்யும் மழை.

அவன் சுட்டும் திசையில் உதிக்கும்
சூரியன்.

சிறு நாற்காலி அசைவில் கண்டங்கள் கடக்கிறான்.
குவளை நீர் கொட்டி அருவியை செய்கிறான்.
கலர் பேனாக்கள் உதிர்த்து பூக்களை வளர்க்கிறான்.

எல்லா விளையாட்டுகளும் சலிக்கும் போது
கடவுள் அவனுக்கு போதிக்கத் தொடங்குவார்
பிரபஞ்சத்தின் ரகசியத்தை.

அவருக்கு அவன் சூட்டியிருக்கும்
பெயரை அப்போது
கடவுளிடம் சொல்லிக் கொள்ளலாம்.

—————————————————
5.
அவன் சொல்லும் கதையில்
நரியின் நிறம் கருப்பு,
காகத்திற்கு பல்வேறு நிறங்கள்.

பிடிவாதமாக
காகத்தின் நிறத்தை மாற்ற மறுக்கும்
அவன் சொல்கிறான்,
பாட்டி சுடும் அப்புச்சி குள்ளமெனவும்
நரி வடை போல இருப்பதாகவும்.

ஆயிரம் ஆண்டுகளின் சலிப்பு சுமந்த
பாட்டியும் நரியும் காகமும்
இயல்பாக புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மறுமொழிகள்
  1. Aravindan says:

    கவிதைகளில் நுட்பம் கூடியிருக்கிறது. பார்வையிலும் கலை நோக்கிலும் கூர்மையும் நுண்மையும் கூடாமல் இது நிகழ்வது சாத்தியம் அல்ல.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s