1.
மரணத்தின் ஆராய்ச்சிக் கூடாரம்
கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகு
ஒரு மதிய பொழுதில்
எங்கள் ஆராய்ச்சி
வெற்றி பெற்றது.
கொலைகளை தற்கொலைகள்தாம் என்று
அறிவித்தார்கள்
நடுவர்கள்.
பிறகு ஒரு நாள்
யுத்தத்தில் ஆயுதமாக தன்னை மாய்த்துக் கொண்டவனை
நாங்கள் கொலை செய்தோம்.
எந்த பாதகமும் இன்றி
யுத்தம் முடிந்தது.
இப்போது எங்கள் ஆராய்ச்சிக்கூடம்
வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
மரணங்களை சேமிக்கத் தொடங்கியாயிற்று.
ஆர்டர் செய்தால் உங்கள் விருப்பத்திற்கிணங்க
தருகிறோம் – விதவிதமான மரணங்களை.
டோர் டெலிவரியும் உண்டு.
2.
எங்கள் வனத்தில்
நாங்கள் காகிதப்பூக்களை
மலர்த்தி வைத்திருக்கிறோம்.
எங்கள் காற்றில் வீசுவது
செயற்கை நறுமணம்.
அலாரம் வைத்தால் மட்டுமே
கூவும்,
பிளாஸ்டிக் மரங்களில் வசிக்கும்
எங்கள் குயில்கள்.
கருணையா?
உண்டு பண்ணுவோம்.
குருதியோ கண்ணீரோ வேண்டாம்.
விற்றுப்பிழைக்க
வேறு எதாவது உண்டா?
3.
மழை
இசை
காற்று
மொழி
கண்ணீர்
காதல்
கோபம்
துரோகம்
எதையோ சேர்த்தும்
எதையோ விடுத்தும்
மிகுந்த கவனத்துடனும் அக்கறைகளுடனும்
நான் கட்டிக்கொண்டிருந்த
சிற்றிலை
மிகச் சாவகாசமாகக் கலைத்துச் சென்றது
ஒரு பேரலை.
4.
எதிரிகள் உலவும் வீதியில்
ஒரு பழித்தெய்வத்தை
நிறுவியிருப்பதாக
அவர்கள் சொன்னார்கள்.
இரண்டொரு நாட்களில்
அவள் இறந்துகிடந்தாள்,
வல்லுறவின் தடயங்களைச்
சுமந்தபடி.
5.
ஊதாநிற வானத்தில்
மெல்லிய கோடு வரைந்தபடி
உயரப் பறந்துக் கொண்டிருந்த
பேர் தெரியாத பறவையின் நிறம்
கறுப்பு என்று உத்தேசமாக
சொன்னேன் நான்.
கடல் நீலம் என்றான் நண்பன்.
அது
வானத்தை
பச்சையாக்கிச்
கொண்டிருந்தது.
6.
புகார்களையோ சந்தேகங்களையோ
கிளப்ப இயலாத
ஒரு வெள்ளைநிற வாகனத்தின் மூலம்
அவர்கள் பட்டியலிலிருந்து
நீக்கப்படுகிறார்கள்.
வெகு இயல்பாக
வெகு சாகவாசமாக,
எந்தத் திட்டமிடல்களுமின்றி
நிகழ்கிறது
அவர்களை
பட்டியலிலிருந்து நீக்குவதற்கான
முதல்கட்ட பணி.
பிறகு மரணமோ நான்காவது மாடியோ.
பட்டியலிலிருந்து முழுமையாக
நீக்கப்படுவதற்கான
விதம் தீர்மானிக்கப்படுகிறது,
அவரவர் விதிப்படி.
பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தன் மகனை
மீண்டும் பட்டியலில் சேர்க்க
இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் அவள்
சொல்கிறாள், ‘தெரியும், ஆனால் தயாராக இல்லை’ என.
அவர்கள் இப்போது புதிதாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அமைதி, சுதந்திரம் எனவும்
அற்புதமான மறுவாழ்வு எனவும்.
7.
ஒரு மாயக்கத்தியை
ஒரு பைத்தியகாரனுக்கு
பரிசளித்த பிறகு
அவர்
அழிவின்
கடவுளானார்.
8.
எனது ரகசியங்களை
இந்த மார்கழியின்
பனிப்புலரிக்குள்
புதைத்து வைத்திருக்கிறேன்.
அவை
அடுத்த மார்கழியில்
மேலெழும்பி வரும்
தமது பிள்ளைக்குட்டிகளோடு.
நன்றி: ஆனந்த விகடன்

