Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

நான் அவளது

இறுதி வேர்.

என்னிடம் இருக்கிறது,

அவள் விட்டுச் சென்ற

தனிமையின்

எச்சங்கள்.

அவளை புசித்து பெருகிய

அவளது தனிமைகள்

என்னிடம் தமது

ரகசியங்களை

வெளியிட்டுக் கொண்டன.

புராதான சுவை கொண்ட

அந்த தனிமைகளை

சிறு மதுக் குவளைகளில்

ஊற்றி

உங்களுக்கு

பருகத்

தருகிறேன்.

உங்கள் போதையின் பிறழ்வுகளுக்காக

காத்துக் கொண்டிருக்கிறாள்

தனிமை தின்ற மீதமாய்

அலைந்து கொண்டிருக்கும்

அவள்.

(சமீபத்தில் விகடனில் வெளியான கவிதை)

தலைப்பில்லை….

பச்சைத் தேநீரின் இளஞ் சூட்டில்

கரைந்து போன எனது பயங்களையும் பதற்றங்களையும்

காற்று உனது அறையின் மூலைகளில்

ஒளித்து வைத்திருக்க கூடும்.

உனது அறையில் வீசிக் கொண்டிருக்கும்

பல்வேறு வாசனைகளோடு

இணைந்து கொண்டிருக்கிறது

என்னுடையதும்.

அப்படியே தானிருக்கிறதா அந்த அறை?

நான் விட்டுச் சென்ற பிறகும்?

பழங்கதைகள் திருடிப் போன அந்த மாலை பொழுதை

எப்போதும் புதிதாகவே வைத்திருக்கும் உத்தியை

உனது அறையிடம் கேள்.

உனது அறையில் நிகழவிருக்கும்

நூற்றுக்கணக்கான தேநீர் பொழுதுகளின்

எதோ ஒரு பொழுதில்

உனது அறை வெளியிடும்

உனக்கு தெரியாத

ரகசியம் ஒன்றை.

உனது அறை

உனக்கு அந்நியமாகிப் போனதை

அப்போது உணர்வாய் நீ.


நான் ஒரு பத்திரிக்கையாளர். பணிநிமித்தம் பலரையும் சந்திக்க நேரிடும். அவற்றுள் சில சுவாரஸ்யமான, சில சஞ்சலமான அனுபவங்களை இங்கு பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

மிகச் சமீபத்தில் சந்தித்தவர் சர்புதின். நான் எவ்வளவோ கேட்டும் சர்புதின் அவரது வீட்டில் வைத்து என்னை பார்க்க மறுத்துவிட்டார். சர்புதினை அழைத்து வரும் மக்கள் தொடர்பு அலுவலர் நாங்களே உங்கள் அலுவலகத்துக்கு வந்துவிடுகிறோம் மேடம் என்றார்கள். இப்போது வரை காரணம் புரியவில்லை.

சர்புதின்

நேரில் பார்த்த போது சர்புதின் எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. நடுத்தர வர்க்க சாயல்கள் கொண்ட ஒடிசலான தேகம் அவருக்கு. புகைக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் என்பதற்காகவே அவரை சந்திக்கவிருந்தேன். அவர் பேசத் தொடங்கிய போதுதான் எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பேச முயற்சிக்கும் போது வார்த்தைகள் வரவில்லை, வெறும் காற்றுதான் வந்தது. புரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த சிரமம். நான் சிரமப்படுகிறேன் என்று தெரிந்ததும் சர்புதின் தனது பாக்கெட்டில் டார்ச்லைட் போன்ற ஏதோ ஒரு கருவியை எடுத்தார். பச்சை நிறத்தில் இருந்தது அது. கழுத்தில் வசதியான ஒரு இடத்தில் வைத்துக் கொண்டார். பிறகு அவர் பேசத் தொடங்கிய போது எனக்கு பெரிய சிரமமாக இல்லை, புரிந்தது. ஆனால் என்ன? அந்த கருவி வழியாக அவர் பேசும் போது அவரது குரலில் எந்த ஏற்ற இறக்கமோ எந்த உணர்ச்சி வெளிப்பாடோ இல்லை. தட்டையாக, திரைப்படங்களில் வரும் ரோபோக்கள் பேசுவது போல இருந்தது.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் தொடர்ந்து புகைப்பிடித்து வந்ததால் கேன்சர் வந்து சர்புதின் தனது குரலை இழந்துவிட்டார். இப்போது electra larynx என்கிற அந்த கருவியின் மூலம் எதோ பிறருக்கு புரியும் வகையில் பேசுகிறார்.  “ஒரு கோஆப்பரேட்டிவ் சொஸைட்டியில் எனக்கு செயலாளர் வேலை. குரல்தான் எனக்கு மூலதனம். டாக்டர் எனக்கு இரண்டு தேர்வுகள் கொடுத்தார். குரல் அல்லது உயிர். வேறு வழியில்லாமல் குரலை இழக்க வேண்டியிருந்தது.” குரலோடு அவரது வேலையும் போய்விட்டது.

பத்து வருடங்கள் ஆகிவிட்டது. குரலை இழந்த சில வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த சர்புதின் பிறகு கேன்சர் இன்ஸ்டிட்யூட் மற்றும் மேலும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து புகைக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர் புகைக்கு எதிராக பேசுகிறார். “எனது அனுபவங்களிலிருந்தே நான் பேசுகிறேன். இப்போது எனக்கு 65 வயது. ஓடியாடி வேலை செய்து முடித்துவிட்டு அலுத்து போய் உட்கார விரும்பும் வயது. குடும்பத்துடன் உரையாட இப்போது போல எப்போதுமே எனக்கு தோன்றியதில்லை. ஆனால் எனக்கு அது சாத்தியமில்லை. அது ஏன் என்பதை அவர்களுக்கு விளக்குகிறேன்.” பெரும்பாலான சமயங்களில் சர்புதின் அவற்றை விளக்ககூட வேண்டியதில்லை. அவரது குரலை கேட்ட நொடியிலேயே கேட்பவர்களுக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிடுகிறது. அது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது என்கிறார் சர்புதின்.

சர்புதினை ட்ரீட் செய்த டாக்டரிடமும் எனது கட்டுரைக்காக பேசினேன். “முன்பு போல இல்லை, இப்போது நிறைய முன்னேற்றங்கள் வந்துவிட்டது, சர்புதினை போல நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புகையினால் உங்கள் குரலை இழக்க நேர்ந்தால் அதை மீட்டுவிடும் முன்னேற்றத்தை மருத்துவம் கண்டிருக்கிறது, ஆனால் உங்கள் குரல் உங்களுடையது போல இருக்காது. பழைய குரலை மீட்டெடுக்கவே முடியாது” என்றார்.

இதன் மூலம் உங்களுக்கு எந்த அறிவுரையும் சொல்ல வரவில்லை. சர்புதின் சமீபத்தில் என்னை பாதித்தவர் என்பதைச் சொல்வது மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.

இப்போது பேசுவோம்.

முன்னொரு காலத்தில்
பேச முடியாமலும் பேச மறுத்தும்
விடுபட்டு போன வார்த்தைகள்
அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றன.
வர்ணங்கள் பூசி,
வாசனை திரவியங்கள் தெளித்து
அழகு குலையாமல் அடுக்கி
அந்த வார்த்தைகளை
அரங்கில் வைப்போம்.
முடிந்தால்
ஒரு விற்பனை பிரதிநிதியை நிறுத்தி வைப்போம்.
புதைக்கப்பட்டவர்களின் வரலாறுகளை எடுத்து
சாட்சிக்கு வைப்போம்.
முன்பு ஆதரவாக பேசியவர்களுக்கு எதிராகவும்
எதிராக பேசியவர்களுக்கு ஆதரவாகவும்
சொற்களை அடுக்கி வைப்போம்.
விற்பனை தந்திரங்களில் அதுவும் ஒன்று.
நிறமற்ற வார்த்தையின் மீதிருப்பது
கண்ணீரின் நிறமென்று
விளம்பரம் செய்வோம்.
குருதியின் நிறம் கொண்ட சொற்கள்
அரிதென்று சொல்லி அதிக விலை வைப்போம்.
யாராவது வருவார்கள்.
நாளை நமது வார்த்தைகள்
நம்முடையதாக இல்லாமல் போகலாம்.

நம்மூரில் நடப்பது போல அரசியல் கட்சிகள் நடத்தி வைக்கும் இலவசத் திருமணங்கள் இந்தியா முழுவதிலும் பிரபலம். மத்திய பிரதேசத்திலும்தான். ம.பி முதல்வர் சிவராஜ் சௌகன் இந்த இலவசத் திருமணங்கள் திட்டத்தால் ரொம்ப புகழ்ப்பெற்றிருக்கிறார். மக்கள் அவரை மிகவும் அபிமானத்துடன் பார்க்கிறார்கள்.

ஆனால் இப்போது சர்ச்சைக்கான காரணம், அப்படி நடக்கும் இலவசத் திருமணங்களில் பங்கேற்கும் மணப்பெண்களின் கன்னித்தன்மையை மற்றும் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்வது என்று மத்திய பிரதேச அரசு எடுத்திருக்கும் முடிவுதான்.

இதற்கு காரணம், ஜூன் 30 அன்று இது போல 152 இலவசத் திருமணங்கள் நடத்தப்பட்டதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு ஒரு பெண் மயக்கமடைந்து விழுந்திருக்கிறார். பிரசவ வலிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. உடனடியாக திருமணத்தை நிறுத்திய அரசு அதிகாரிகள் அங்கு கூடியிருந்த 152 பெண்களையும் பரிசோதனை பார்த்ததில் 14 பேர் கர்ப்பமாக இருந்தார்களாம்.

இலவச திருமணங்கள் மூலம் கிடைக்கும் 5000 ரூபாய் பணத்தை பெறுவதற்காக கல்யாணம் ஆன சிலர் இது போன்று ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள் அரசு அதிகாரிகள். ஆனால் சில இடைத்தரகர்கள் இதன் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கிட்டத்தட்ட 90,000 இலவச திருமணங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. அவற்றில் பல போலி என்று இப்போது சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது. அதை சரி செய்யவே இப்படி ஒரு அதிரடி முடிவு.

இப்போது எனக்கு சில கேள்விகள்.

திருமணமான பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் அது போலி என்றால் அது திருமணமான ஆண்களுக்கும்தானே பொருந்தும்?

பெண்கள் கன்னித்தன்மை வாய்ந்தவர்களா என்று கண்டறிந்துவிடும் அரசாங்கம், ஆண்களின் கன்னித்தன்மைக்கு எந்தவிதமான பரிசோதனைகளை மேற்கொள்ளும்?

அல்லது திருமணத்திற்கான சான்று ஆண்களிடம் இருக்காது என்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறதா?

உண்மையிலேயே போலித் திருமணங்களை தடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் அதற்கு வேறு வழியே இருக்காதா?

இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பதன் மூலம் பெண்களை அவமானப்படுத்துகிறோம் என்று பெண்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணாதிக்க அரசியல்வாதிகளின் மூளைக்கு எட்டவே எட்டாதா?

வெறும் 5000 ரூபாய் பணத்துக்கு ஒரு பெண் அல்லது ஒரு ஆண் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார் என்றால் அவருடைய குடும்பப் பொருளாதார பின்னணி எந்த நிலையில் இருக்கும்? இதை சரி செய்ய முயற்சி எடுக்காத அரசு, இலவசத் திருமணம் போன்ற ஜனரஞ்சகத் திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது எந்தவிதத்தில் நியாயம்?

கடைசியாக, ஒரு சந்தேகம். இவர்களையெல்லாம் நாம் தேர்ந்தெடுக்கதான் வேண்டுமா?

கடைசித் தகவல்: இப்போது பெண்ணியவாதிகள் பலர் இந்தத் பரிசோதனை முயற்சிகளை கடுமையாக எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்ணிய அமைப்புகளும் இந்த பிரச்னையை கையிலெடுத்திருக்கின்றன. விரைவில் இந்த பிரச்னைக்கு முடிவு வரும் என்று நம்புவோம்..

ராபியா பாஸ்ரி 700களில் ஈராக்கில் வாழ்ந்த ஒரு பெண் கவிஞர். முதல் சூபிக்களில் ஒருவராக இவர் இருக்ககூடும் என்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் வந்த இன்னொரு கவிஞர். தனது காலத்தின் முக்கிய மதத்தலைவர்களுக்கு குருவாக ராபியா இருந்தார் என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லாத காலத்தில் பக்தியின் வழி சுதந்திரத்தை அடைய முனைந்தார்கள் என்பதற்கு ஆண்டாள், மீரா, லல்லா போல ராபியாவும் ஒரு சான்று.  மீரா, ஆண்டாள் போல தெய்வீக காதலை இஸ்லாத்தில் அறிமுகப்படுத்தியவர் இவர் என்று சொல்லப்படுகிறது.  சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகள்.

ராபியா...

எனது இறைவன், எனது கடவுள்

விழிகள் அமைதியை நாடுகின்றன,

நட்சத்திரங்கள் மூடிக்கொள்கின்றன.

சன்னமாக இருக்கிறது,

அதனதன் கூடுகளில் இருக்கும் பறவைகளில் ஒலிகள்.

அலைகளின் வாழும் அசுரர்களின் சப்தங்களும்.

மாற்றங்கள் அறியாத மிகப்பெரியவன் நீ.

நிலை மாறாத சமன் நீ.

மறைந்துவிடாத அழிவின்மை நீ.

அரசர்களின் கதவுகள் இப்போது தாழிடப்பட்டிருக்கின்றன,

அவற்றை படையினர் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உன்னை தேடி வருபவர்களுக்காக

உனது கதவுகள் திறந்திருக்கின்றன.

எனது கடவுளே,

இப்போது எல்லோரும் அவரவர் காதலர்களுடன் தனித்து இருக்கிறார்கள்.

நான் உன்னுடன் தனித்து இருக்கிறேன்.

———————————

நரகம் பற்றிய பயத்தில்

உன்னை வணங்கினால்

என்னை நரகத்தில் தீயிலிடு.

சுவர்கத்தின் மீதான ஆசையில்

உன்னை வணங்கினால்

சுவர்கத்தில் வைத்து என்னை பூட்டிவிடு.

உன்னை உனக்காக மட்டுமே

வணங்குவேனென்றால்

உனது முடிவில்லாத அழகை

எனக்கு மறுத்துவிடாதே..

———————————————

உன்னுடைய ஒரு பகுதி

எங்கே செல்கிறதோ

மீதி அங்கு வந்து சேரும்,

நேரத்தைப் பொறுத்து..

———————————-

நீ உன்னை ஒரு ஆசிரியன் என்கிறாய்

அதனால் கற்றுக் கொள்.

————————————-

நான் கடவுளை நேசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாத்தானை வெறுக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை.

——————————————-

ஒரு கையில் விளக்கையும்

மற்றொரு கையில் ஒரு வாளி தண்ணிரையும் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

சுவர்கத்தை தீயிலிட்டு,

நரகத்தின் மீதான தீயை அணைக்கப் போகிறேன்.

கடவுளை நோக்கிப் பயணிப்பவர்கள்

திரை விலக்கி

உண்மையை பார்க்கட்டும்.

——————————————-

யாரையாவது திறக்கச் சொல்லி மன்றாடி

எவ்வளவு காலம்தான் திறந்த கதவை

தட்டிக்கொண்டிருப்பாய்?

முதலில் ஒரு பிரகடனம். நான் ஒரு பெண்ணியவாதி. இதை சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் 498A என்கிற சட்டத்தால் பல குடும்பங்கள் உடைந்து வருவதை கடந்த சில காலமாகவே நான் கேள்விப்பட்டு வருகிறேன். இந்த சட்டத்தின் கீழ் வரதட்சணை  புகார் ஒரு பெண் கொடுத்தால் எந்தவித விசாரணையும் இன்றி புகார் கொடுக்கப்பட்டவர்களை கைது செய்ய முடியும். அதிலும் ஜாமீன் கிடைக்காத வழக்குகளில் கைது செய்ய முடியும். இதனால் பல குடும்பங்கள் உடைந்து வருகின்றன. நடிகர் பிரசாந்தின் மனைவி இந்த சட்டத்தின் கீழ்தான் பிரசாந்த் மீது புகார் அளித்தார். பிறகு அந்த வழக்கே திசை மாறி போனது. இது குறித்து நான் ஒரு கட்டுரை எழுத முற்பட்ட போது பல பாதிக்கப்பட்ட ஆண்களை பார்க்க முடிந்தது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சீரியலில் ஒரு மனைவி தனது கணவனிடம் வீடு வாங்கவிட்டால் வரதட்சணை கொடுமை என்று புகார் தரப்போவதாக மிரட்டுகிறார். இப்படி பதிவாகும் பல குற்றசாட்டுகளில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் சில குற்றசாட்டுகளிலாவது வேறு நோக்கங்களுக்காக அதை பதிவு செய்வது நடக்கிறது.
இந்த 498A என்கிற சட்டம் அறிமுகப்படுத்தப்படும் போது நிச்சயம் நல்ல நோக்கங்கள் இருந்திருக்க கூடும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் எந்தவிதமான நேரக்கடத்தலும் இருக்க கூடாது என்று சட்ட வல்லுனர்கள் நினைத்திருக்கலாம்.  இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (குறிப்பாக குடும்ப வன்முறைகள்) குறைந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. குடிகார கணவர்களிடம் மாட்டிக் கொண்டு அன்றாடம் அடிவாங்கும் சமூகத்தின் அடித்தட்டு பெண்கள் சிலரிடம் நான் கேட்டபோது இப்படியொரு சட்டம் இருப்பதே அவர்களுக்கு தெரியவில்லை.
அப்படியென்றால் இந்த சட்டம் போய் சேர வேண்டியவர்களை சரியாக சேரவில்லை என்றுதானே அர்த்தம். பல சட்டங்கள் போல இதுவும் துஷ்ப்ரயோகம் செய்பவர்களின் கைகளில் போய் சிக்கியிருக்கிறது.
உடனடி தேவை, உண்மையில் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு. பிறகு இந்த சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படாதவாறு பாதுகாப்பு. என்ன சொல்கிறீர்கள்?

இலங்கையில் நடந்து முடிந்த பெரும் போர் தமிழர் வாழ்வை மூடியிருந்தது. அங்கு அமைதியைப் போல ஒன்று தென்பட்டாலும், அது அமைதி இல்லை என்று மிக நிச்சயமாகச் சொல்ல முடியும். இது இலங்கைக்கு நான் மேற்கொண்ட இந்த இரண்டாம் பயணம். போருக்குப் பிந்தையது. கொண்டாட்டங்கள் இன்னும் முடிந்திருக்கவில்லை. சிங்கள தேசியக் கொடி பறக்காத வாகனத்தையோ கட்டடத்தையோ பார்ப்பது மிக அரிதாக இருந்தது.

நவம்பரில் நான் சென்றபோது தமிழர்களிடமிருந்த நம்பிக்கையும் தைரியமும் இப்போது முற்றாக அழிந்துபோயிருந்தன. நண்பர்களாக அறியப்பட்டவர்களில் பலர் பேசவே மறுத்தார்கள். பல நண்பர்களைப் பார்க்கவே முடியவில்லை. பலரும் போர் முடியும் தருணத்தில் புலம்பெயர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

“தமிழர்களுக்கும் ராஜபக்சே அதிபர் என்றால் இந்தக் கொண்டாட்டங்களைத் தவிர்த்திருக்க வேண்டும். தமிழர்கள் இதனால் எப்படிக் கூனிக்குறுகிப் போகிறார்கள் என்பதை அவர் அறியாமலா இருப்பார்?” என்று ஒரு தமிழ்ப் பத்திரிக்கையாளர் சொன்னபோது, தமிழர்களுக்குச் சம உரிமை என்று அதிபர் சொல்வதையும் அதை உலக நாடுகள் நம்புவதையும் நினைத்துச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. “போர் முடிந்துவிட்டதாகச் செய்தி வந்ததிலிருந்து இன்றுவரை நாங்கள் வெளியே செல்லவில்லை. பேருந்துகளிலோ ரயில்களிலோ பயணம் செய்யும்போது தமிழர் என்று தெரிந்தால் பகடி செய்கிறார்கள்” என்றார் இன்னொரு தமிழ்ப் பத்திரிகையாளர்.

நான் சென்ற சமயத்தில்தான் அதிபருடனான பத்திரிகை ஆசிரியர்களின் சந்திப்பு நடந்து முடிந்திருந்தது. போரின் தீவிரங்கள் துரத்த, வாழ்வாதாரங்களை விட்டுவிட்டுத் திசைகள் தெறிக்க ஓடியதில் வவுனியா முகாமுக்குத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்த சமயம் அது. கையிழந்து, காலிழந்து வந்த அவர்களைத் ‘தலையில் மூட்டை மூட்டையாகப் பணம் சுமந்து வந்ததாக’ சொல்லி அந்த ஆசிரியர்களின் சந்திப்பில் அதிபர் ஏளனம் செய்ததாகச் சொல்கிறார் அதில் பங்கேற்ற ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர். அவரிடம் ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கைகளும் அந்தச் சந்திப்போடு உதிர்ந்துபோயின.

மாற்றுக்கொள்கைகளுக்கான மையம் (Centre for Policy Alternatives) என்றொரு அமைப்பு. பல நெருக்கடிகளுக்கு இடையிலும் மிக நேர்மையாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமைப்பு அது. போர் முடிந்த காலகட்டத்தில் பிற நிர்வாகங்கள் போலச் சிங்களக் கொடியை அதன் கட்டடத்தில் ஏற்ற மறுத்துவிட்டது அந்த அமைப்பு. சில நாட்களிலேயே அந்த அமைப்பிற்கு ஒரு கடிதம் வந்தது. துரோகிகள் என்று அந்த அமைப்பினரைச் சாடிய அந்தக் கடிதம், ஒரு வாரத்துக்கு அதன் அலுவலகங்களை மூட வேண்டும் என்று அறிவுறுத்தியது. தவிர, சிங்களக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் ராணுவ நலனுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடையாக அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. “உங்களது செயல்பாடுகளை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம், நாசகாரர்களை ஒழிப்போம். பயமின்றி முன்னேறுவோம், அன்னை இலங்கையைக் காப்போம்” என்று முடிந்திருந்தது அது. எனது பயணத்தின்போது நான் அவர்களுடைய அலுவலகத்துக்கும் செல்ல நேர்ந்தது. எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை என்று அப்போது அவர்கள் சொன்னார்கள். வாழ்வு முழுவதையும் போரின் தீவிரங்களிலும் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கான ஆயத்தங்களிலும் செலவிடும் மக்களின் நீள்துயரங்களை அந்தச் சில நிமிடங்களில் கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடிந்தது.

இலங்கையில் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகும் ஊடகங்களுக்கு எதிரான போர் முடியவில்லை. போர் நடந்த காலத்தில் இலங்கை அரசுக்கு எதிராகச் செயல்பட்ட பத்திரிகையாளர்களைத் துரோகிகள் என்றழைத்து அவர்களைப் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டன சிங்களச் சார்பு ஊடகங்கள். இந்தச் செய்தி குறித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க பத்திரிகையாளர் குழு ஒன்று அதிபரை ஜூன் ஒன்றாம் தேதி சந்தித்திருக்கிறது. அந்த இரண்டு மணி நேரச் சந்திப்பு நடந்துகொண்டிருந்தபோதே துரோகி எனப் பட்டம் பெற்றவர்களுள் ஒருவரான பொடல ஜெயந்த என்ற பத்திரிகையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இப்போதும் அவர் மருத்துவமனையில்தான் இருக்கிறார்.

இப்போதும் என்னால் செரிக்க முடியாத ஒரு காட்சி, ஒரு தமிழ் வீட்டில் பறந்த சிங்களக் கொடி. நான் கேட்டபோது, அந்த வீட்டிலிருந்த தமிழர்கள் அழுது விட்டார்கள். “வேறு வழியில்லை அக்கா. இல்லேனா நாங்கள் துரோகிகளாக் குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லப்படுவோம். பிரபாகரனை நாங்கள் தெய்வமா மதிச்சோம். அவர் மட்டும் சில தவறுகளைச் செய்யாம இருந்திருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது” என்றார் அந்த வீட்டிலிருந்தவர். என்ன சொல்லித் தேற்ற?

நான் அங்கிருந்த சமயத்தில் ஒரு நண்பரோடு சேர்ந்து சிங்கள புத்த பிக்கு ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. “உங்கள் மதத்திற்கு எதிரான செயல் இல்லையா போர்?” என்று அவரிடம் கேட்டேன். “உண்மைதான், இது எதுவுமே எனக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை. இளைஞர்கள் நிறையப் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறு என்ன வழி? அவர்கள் தவறான பாதையைத் தேர்ந் தெடுத்தார்கள். அதனால் அவர்களைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை” என்றார்.

இலங்கை மண்ணில் புத்தர் இரண்டாம் முறையாக இறந்திருக்கிறார். இந்தமுறை கொல்லப்பட்டிருக்கிறார்.

காலச்சுவடு, ஜூலை 2009.

நம்மூர் ரித்தீஷ், அழகிரி பற்றிய பதிவு இல்லை இது.

தேசிய தேர்தல் கண்காணிப்பகம் என்கிற அமைப்பு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிந்த பிறகு ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது. 2004 தேர்தல்களோடு ஒப்பிடும் போது இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோடீஸ்வர எம்.பிக்கள் 98 சதவிகதம் அதிகரித்திருக்கிறார்கள். அதாவது 2004ல் 154 கோடீஸ்வர எம்.பிக்கள் என்றால் இந்த முறை 304 கோடீஸ்வர எம்.பிக்கள். அதில் 141 பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். 58 பேர் பா.ஜ.க உறுப்பினர்கள். சமாஜ்வாதி கட்சியில் 14 பேரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 13 பேரும் தி.மு.கவில் 12 பேரும் கோடீஸ்வர எம்.பிக்கள். இடதுசாரி கட்சிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 24 பேரில் ஒருவர் மட்டும்தான் கோடீஸ்வரர் (அவமானம்!)

இந்த தேர்தலில் ஒரு மில்லியனுக்கும் குறைவான சொத்து இருந்த 3437 பேர் போட்டியிட்டார்கள். அதில் 15 பேர் மட்டும்தான் ஜெயித்திருக்கிறார்கள். 1லிருந்து 5 மில்லியன் வரை சொத்து கணக்கு காட்டிய போட்டியாளர்கள் 1785. அதில் 116 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 5 முதல் 50 மில்லியன் ரூபாய் வரை கணக்கு காட்டியவர்களின் வெற்றி வாய்ப்பு 19 சதவிகிதம் கூடியிருக்கிறது.

50 மில்லியன் ரூபாய்க்கும் மேல் கணக்கு காட்டிய 322 பேரில் 106 பேர் சுலபமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதாவது கோடிகள் ஏற ஏற வெற்றி வாய்ப்புகளும் ஏறும்.

ஒரு ஆறுதலான விஷயம்: இது தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தவில்லை. மொத்த இந்தியாவிலும் இதுதான் நிலை.

இலங்கை வவுனியாவில் உள்ள அகதி முகாமிற்கு சென்றது சிறப்பான அனுபவமாக இருந்தது என்று இந்து நாளிதழில் அதன் ஆசிரியர் ராம் எழுதிய சில நாட்களிலேயே இந்தியாவிலிருந்து வவுனியா வரை சென்ற இன்னொரு பத்திரிக்கையாளரும் அகதிகள் முகாம்கள் பற்றி தனது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். இன்றைய டைம்ஸ் நாளிதழில் அங்கு சென்று வந்த ஜெயா மேனன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

http://timesofindia.indiatimes.com/World/Tamil-youth-refugees-in-their-own-land/articleshow/4754861.cms

http://timesofindia.indiatimes.com/World/South-Asia/Where-wait-for-water-medicine-lasts-days/articleshow/4754860.cms


பழைய பதிவுகள் »