Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

1.
மரணத்தின் ஆராய்ச்சிக் கூடாரம்

கடும் பிரயத்தனங்களுக்குப் பிறகு

ஒரு மதிய பொழுதில்

எங்கள் ஆராய்ச்சி

வெற்றி பெற்றது.

கொலைகளை தற்கொலைகள்தாம் என்று

அறிவித்தார்கள்

நடுவர்கள்.

பிறகு ஒரு நாள்

யுத்தத்தில் ஆயுதமாக தன்னை மாய்த்துக் கொண்டவனை

நாங்கள் கொலை செய்தோம்.

எந்த பாதகமும் இன்றி

யுத்தம் முடிந்தது.

இப்போது எங்கள் ஆராய்ச்சிக்கூடம்

வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

மரணங்களை சேமிக்கத் தொடங்கியாயிற்று.

ஆர்டர் செய்தால் உங்கள் விருப்பத்திற்கிணங்க

தருகிறோம் – விதவிதமான மரணங்களை.

டோர் டெலிவரியும் உண்டு.

2.

எங்கள் வனத்தில்

நாங்கள் காகிதப்பூக்களை

மலர்த்தி வைத்திருக்கிறோம்.

எங்கள் காற்றில் வீசுவது

செயற்கை நறுமணம்.

அலாரம் வைத்தால் மட்டுமே

கூவும்,

பிளாஸ்டிக் மரங்களில் வசிக்கும்

எங்கள் குயில்கள்.

கருணையா?

உண்டு பண்ணுவோம்.

குருதியோ கண்ணீரோ வேண்டாம்.

விற்றுப்பிழைக்க

வேறு எதாவது உண்டா?

3.

மழை

இசை

காற்று

மொழி

கண்ணீர்

காதல்

கோபம்

துரோகம்

எதையோ சேர்த்தும்

எதையோ விடுத்தும்

மிகுந்த கவனத்துடனும் அக்கறைகளுடனும்

நான் கட்டிக்கொண்டிருந்த

சிற்றிலை

மிகச் சாவகாசமாகக் கலைத்துச் சென்றது

ஒரு பேரலை.

4.

எதிரிகள் உலவும் வீதியில்

ஒரு பழித்தெய்வத்தை

நிறுவியிருப்பதாக

அவர்கள் சொன்னார்கள்.

இரண்டொரு நாட்களில்

அவள் இறந்துகிடந்தாள்,

வல்லுறவின் தடயங்களைச்

சுமந்தபடி.

5.

ஊதாநிற வானத்தில்

மெல்லிய கோடு வரைந்தபடி

உயரப் பறந்துக் கொண்டிருந்த

பேர் தெரியாத பறவையின் நிறம்

கறுப்பு என்று உத்தேசமாக

சொன்னேன் நான்.

கடல் நீலம் என்றான் நண்பன்.

அது

வானத்தை

பச்சையாக்கிச்

கொண்டிருந்தது.

6.

புகார்களையோ சந்தேகங்களையோ

கிளப்ப இயலாத

ஒரு வெள்ளைநிற வாகனத்தின் மூலம்

அவர்கள் பட்டியலிலிருந்து

நீக்கப்படுகிறார்கள்.

வெகு இயல்பாக

வெகு சாகவாசமாக,

எந்தத் திட்டமிடல்களுமின்றி

நிகழ்கிறது

அவர்களை

பட்டியலிலிருந்து நீக்குவதற்கான

முதல்கட்ட பணி.

பிறகு மரணமோ நான்காவது மாடியோ.

பட்டியலிலிருந்து முழுமையாக

நீக்கப்படுவதற்கான

விதம் தீர்மானிக்கப்படுகிறது,

அவரவர் விதிப்படி.

பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தன் மகனை

மீண்டும் பட்டியலில் சேர்க்க

இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் அவள்

சொல்கிறாள், ‘தெரியும், ஆனால் தயாராக இல்லை’ என.

அவர்கள் இப்போது புதிதாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அமைதி, சுதந்திரம் எனவும்

அற்புதமான மறுவாழ்வு எனவும்.

7.

ஒரு மாயக்கத்தியை

ஒரு பைத்தியகாரனுக்கு

பரிசளித்த பிறகு

அவர்

அழிவின்

கடவுளானார்.

8.

எனது ரகசியங்களை

இந்த மார்கழியின்

பனிப்புலரிக்குள்

புதைத்து வைத்திருக்கிறேன்.

அவை

அடுத்த மார்கழியில்

மேலெழும்பி வரும்

தமது பிள்ளைக்குட்டிகளோடு.

நன்றி: ஆனந்த விகடன்

ஜனவரி 3ந்தேதி உயிரெழுத்து பதிப்பகம் நடத்திய நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு நானும் முரளியும் சென்றிருந்தோம். நண்பர்களைப் பார்ப்பதற்காக நாங்கள் இந்த விழாக்களுக்கு போவதுண்டு. குறிப்பிட்ட அந்த விழாவில் பல ஹைலைட்டுகள்.

எனக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பட்டன. ஒன்று, விழாவுக்கு தலைமை தாங்கிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் அப்துல் ரகுமானைப் புகழ்ந்து சொன்ன சில வார்த்தைகள். பல வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு எழுத்தாளர் கோட்டாவில் எம்.பி.பிஎஸ் சீட் பெறுவதற்கு அப்துல் ரகுமான் காரணமாக இருந்தார் என்று குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். தனது மகள் 600க்கு 596 மார்க்குகள் எடுத்ததாக சொன்னார் அவர். “அதற்கு மேல் அவளால் எடுத்திருக்க முடியாது. ஆனால் நான் பிறந்து வளர்ந்த சாதியின் சுமை காரணமாக அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை” என்று சொன்னார். பிறகு பேசிய யாரோ ஒருவர் அவர் பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.

2006ல் International Dalit Solidarity Network என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வகுப்பறைகளில் கடைசி பெஞ்சுகளில் உட்கார கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களுடன் சேர்ந்து மற்ற சாதியினர் உணவருந்துவதில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்திய அரசின் ஒரு அறிக்கைப்படி கிட்டத்தட்ட 73 சதவிகிதம் தலித் மாணவர்கள் பள்ளியிறுதி முடிவதற்குள் பள்ளியிலிருந்து விலகி படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். காரணம், பள்ளிக்கூடங்களில் அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே பல பள்ளிகளில் கழிவறைகளை கழுவவும் வகுப்பறைகளை கூட்டவும் தலித் குழந்தைகள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதில் எதுவும் நாஞ்சில் நாடனின் மகளுக்கு நிகழ்ந்திருக்காது. அவருடைய பள்ளிக்கூட படிப்பு மிகவும் உயர்தரமான ஒன்றாக இருந்திருக்கும். தலித் மாணவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

நாஞ்சில் நாடன் சாதியின் சுமை என்று எதைச் சொல்கிறார்?

அப்துல் ரகுமானை பாராட்டும் அவசரத்தில் அவரை ‘ஆண்மையுள்ள கவிஞர்’ என்றும் குறிப்பிட்டார். ஆண்மை என்பதற்கு சமூகம் வைத்திருக்கும் போலியான வரைமுறைகளுக்கு நாஞ்சில் நாடன் என்னும் மகா எழுத்தாளனும் தப்பவில்லை.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. பிறகு பேச வந்த அப்துல் ரகுமான் ‘ஆண்மையுள்ள’ ஒரு கவிஞராகவே நடந்துகொண்டார். அவரது பேச்சில் ஆணாதிக்கம் மிளிர்ந்தது. சக்தி ஜோதியின் கவிதை தொகுப்பை வெளியிட்டு பேசியவர், ‘செக்ஸ் கவிதைகள்’ எழுதுவதாக இன்றைய பெண் கவிஞர்களை கடுமையாக சாடினார். “நீங்களெல்லாம் ஏன் எழுதறீங்கனு இருக்கு. பின் பக்கம் எழுத போக வேண்டியதுதான். ஏன் இலக்கியம் பக்கம் வர்ற?” என்று மிகக் தரக்குறைவாக பேசினார். உச்சபட்சமாக, சக்தி ஜோதியின் கவிதை ஒன்றை வாசித்துக்காட்டி, ‘”இதுவும் செக்ஸ் கவிததான். ஆனா எப்படி இருக்கு பாரு. நாகரீகமா பண்பாடு மீறாம இருக்கு, நீயும் எழுதறியே?” என்று ஏக வசனம்.

பெண் கவிஞர்கள் எழுதும் கவிதைகள் பாலியலை அரசியலாக்குகிறது. பாலியல் அடிப்படையில் பெண்ணுடல் மீது ஆதிக்கம் செலுத்த விழையும் ஆணாதிக்கப்போக்கை கேள்விக்குட்படுத்துகிறது. இது எதையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க மனதின் வெளிப்பாடே அப்துல் ரகுமான் போன்றவர்களின் விமர்சனங்கள், ‘செக்ஸ் கவிதைகள்’ என்று கொச்சைப்படுத்துதல்கள்.

விழாவுக்குப் போகாமல் இருந்திருந்தால், நாஞ்சில் நாடன் மீதிருந்த மரியாதை எஞ்சியிருக்கும்.

நீண்ட காலத்துக்கு பிறகு இந்த பதிவு. உடல் அழுக்கை நீக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஹமாம் சோப்பு தயாரிப்பாளர்களின் உள்ள அழுக்கை பற்றியது.

தலித் முரசின் சமீபத்திய இதழில் ஊடகங்கள் பற்றி மிக சிறப்பான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. மீனா மயில் எழுதியிருக்கிறார். ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் கட்டுரையை படிக்க ஆரம்பித்த போதே எனக்கு பலத்த அதிர்ச்சி. அதில் அவர் ஹமாம் சோப் விளம்பரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கட்டுரையின் ஹமாம் சோப்பு பகுதியை மட்டும் இங்கு குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ஹமாம் சோப் விளம்பரக் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையை கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பன குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோட விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விலையாடிககொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்ல இந்த சந்தேகம் எல்லாம் எங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை அடித்தபடி அவர் இப்படி சொல்கிறார்: “ஆட்டோவில் அந்த குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதை சொல்லும் போது அவர் கண்களிலும் உடல் மொழியிலும்வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.”

இப்படி நீள்கிறது அந்த கட்டுரை. என்னுடைய அதிர்ச்சிக்கு காரணம், அந்த விளம்பரம் மட்டும் அல்ல எனது சுரணையும்தான். அந்த விளம்பரம் தொடர்ந்து பல்வேறு தொலைகாட்சிகள் மூலம் எனது பார்வையை எட்டியிருந்தாலும், எனது கவனத்தை ஈர்க்கவில்லை. எனது சுரணையை கிளறவில்லை. அதை இங்கே வெட்கத்தினுடேயே பதிவு செய்கிறேன்.  அந்த விளம்பரத்தில் அந்த மனிதர் சொல்வது ‘கண்ட குழந்தைகளையா அல்லது அந்த குழந்தைகளையா’ என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள மீண்டும் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். கண்ட குழந்தைகள் என்று சொன்னாலும் அது அப்பட்டமான சாதி வெறியே. ஆனால் அவர் ஒரு படி மேலே போய் மிகத் தெளிவாக அந்த குழந்தைகள் என்று தான் சொல்கிறார். மீனா மயில் எழுதியிருப்பது போல அருவருப்பாகத்தான் இருக்கிறது.

ஒரு சோப் விளம்பரத்தில் இவ்வளவு அப்பட்டமான சாதிய வெறியும் உள்ள அழுக்கும் வெளிப்படுமா என்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. தொடர்ந்து சிகப்பழகு கிறீம்களின் எல்லா விளம்பரங்களும் பெண்களையும் பொதுவாக கருப்பாக இருக்கும் மக்களையும் கூனிக் குறுக செய்வது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இப்படிப்பட்ட விளம்பரங்களையும் பொருட்களையும் நாம் புறக்கணிக்காத வரையில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிட போவதில்லை. எப்போதும் பனியன் அணிந்த பகட்டான தோற்றம் கொண்ட மேல்சாதி பிரதிநிதி யாராவது நமக்கு விருப்பமில்லாவிட்டாலும் நமது வீடுகளுக்கு வந்து தலித் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துகளை உதிர்த்துக் கொண்டுதான் இருக்க போகிறார்கள். நாம் என்ன செய்ய போகிறோம்?


நான் அவளது

இறுதி வேர்.

என்னிடம் இருக்கிறது,

அவள் விட்டுச் சென்ற

தனிமையின்

எச்சங்கள்.

அவளை புசித்து பெருகிய

அவளது தனிமைகள்

என்னிடம் தமது

ரகசியங்களை

வெளியிட்டுக் கொண்டன.

புராதான சுவை கொண்ட

அந்த தனிமைகளை

சிறு மதுக் குவளைகளில்

ஊற்றி

உங்களுக்கு

பருகத்

தருகிறேன்.

உங்கள் போதையின் பிறழ்வுகளுக்காக

காத்துக் கொண்டிருக்கிறாள்

தனிமை தின்ற மீதமாய்

அலைந்து கொண்டிருக்கும்

அவள்.

(சமீபத்தில் விகடனில் வெளியான கவிதை)

தலைப்பில்லை….

பச்சைத் தேநீரின் இளஞ் சூட்டில்

கரைந்து போன எனது பயங்களையும் பதற்றங்களையும்

காற்று உனது அறையின் மூலைகளில்

ஒளித்து வைத்திருக்க கூடும்.

உனது அறையில் வீசிக் கொண்டிருக்கும்

பல்வேறு வாசனைகளோடு

இணைந்து கொண்டிருக்கிறது

என்னுடையதும்.

அப்படியே தானிருக்கிறதா அந்த அறை?

நான் விட்டுச் சென்ற பிறகும்?

பழங்கதைகள் திருடிப் போன அந்த மாலை பொழுதை

எப்போதும் புதிதாகவே வைத்திருக்கும் உத்தியை

உனது அறையிடம் கேள்.

உனது அறையில் நிகழவிருக்கும்

நூற்றுக்கணக்கான தேநீர் பொழுதுகளின்

எதோ ஒரு பொழுதில்

உனது அறை வெளியிடும்

உனக்கு தெரியாத

ரகசியம் ஒன்றை.

உனது அறை

உனக்கு அந்நியமாகிப் போனதை

அப்போது உணர்வாய் நீ.


நான் ஒரு பத்திரிக்கையாளர். பணிநிமித்தம் பலரையும் சந்திக்க நேரிடும். அவற்றுள் சில சுவாரஸ்யமான, சில சஞ்சலமான அனுபவங்களை இங்கு பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

மிகச் சமீபத்தில் சந்தித்தவர் சர்புதின். நான் எவ்வளவோ கேட்டும் சர்புதின் அவரது வீட்டில் வைத்து என்னை பார்க்க மறுத்துவிட்டார். சர்புதினை அழைத்து வரும் மக்கள் தொடர்பு அலுவலர் நாங்களே உங்கள் அலுவலகத்துக்கு வந்துவிடுகிறோம் மேடம் என்றார்கள். இப்போது வரை காரணம் புரியவில்லை.

சர்புதின்

நேரில் பார்த்த போது சர்புதின் எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. நடுத்தர வர்க்க சாயல்கள் கொண்ட ஒடிசலான தேகம் அவருக்கு. புகைக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் என்பதற்காகவே அவரை சந்திக்கவிருந்தேன். அவர் பேசத் தொடங்கிய போதுதான் எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர் பேச முயற்சிக்கும் போது வார்த்தைகள் வரவில்லை, வெறும் காற்றுதான் வந்தது. புரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த சிரமம். நான் சிரமப்படுகிறேன் என்று தெரிந்ததும் சர்புதின் தனது பாக்கெட்டில் டார்ச்லைட் போன்ற ஏதோ ஒரு கருவியை எடுத்தார். பச்சை நிறத்தில் இருந்தது அது. கழுத்தில் வசதியான ஒரு இடத்தில் வைத்துக் கொண்டார். பிறகு அவர் பேசத் தொடங்கிய போது எனக்கு பெரிய சிரமமாக இல்லை, புரிந்தது. ஆனால் என்ன? அந்த கருவி வழியாக அவர் பேசும் போது அவரது குரலில் எந்த ஏற்ற இறக்கமோ எந்த உணர்ச்சி வெளிப்பாடோ இல்லை. தட்டையாக, திரைப்படங்களில் வரும் ரோபோக்கள் பேசுவது போல இருந்தது.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் தொடர்ந்து புகைப்பிடித்து வந்ததால் கேன்சர் வந்து சர்புதின் தனது குரலை இழந்துவிட்டார். இப்போது electra larynx என்கிற அந்த கருவியின் மூலம் எதோ பிறருக்கு புரியும் வகையில் பேசுகிறார்.  “ஒரு கோஆப்பரேட்டிவ் சொஸைட்டியில் எனக்கு செயலாளர் வேலை. குரல்தான் எனக்கு மூலதனம். டாக்டர் எனக்கு இரண்டு தேர்வுகள் கொடுத்தார். குரல் அல்லது உயிர். வேறு வழியில்லாமல் குரலை இழக்க வேண்டியிருந்தது.” குரலோடு அவரது வேலையும் போய்விட்டது.

பத்து வருடங்கள் ஆகிவிட்டது. குரலை இழந்த சில வருடங்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த சர்புதின் பிறகு கேன்சர் இன்ஸ்டிட்யூட் மற்றும் மேலும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து புகைக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொண்டு அவர் புகைக்கு எதிராக பேசுகிறார். “எனது அனுபவங்களிலிருந்தே நான் பேசுகிறேன். இப்போது எனக்கு 65 வயது. ஓடியாடி வேலை செய்து முடித்துவிட்டு அலுத்து போய் உட்கார விரும்பும் வயது. குடும்பத்துடன் உரையாட இப்போது போல எப்போதுமே எனக்கு தோன்றியதில்லை. ஆனால் எனக்கு அது சாத்தியமில்லை. அது ஏன் என்பதை அவர்களுக்கு விளக்குகிறேன்.” பெரும்பாலான சமயங்களில் சர்புதின் அவற்றை விளக்ககூட வேண்டியதில்லை. அவரது குரலை கேட்ட நொடியிலேயே கேட்பவர்களுக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிடுகிறது. அது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது என்கிறார் சர்புதின்.

சர்புதினை ட்ரீட் செய்த டாக்டரிடமும் எனது கட்டுரைக்காக பேசினேன். “முன்பு போல இல்லை, இப்போது நிறைய முன்னேற்றங்கள் வந்துவிட்டது, சர்புதினை போல நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புகையினால் உங்கள் குரலை இழக்க நேர்ந்தால் அதை மீட்டுவிடும் முன்னேற்றத்தை மருத்துவம் கண்டிருக்கிறது, ஆனால் உங்கள் குரல் உங்களுடையது போல இருக்காது. பழைய குரலை மீட்டெடுக்கவே முடியாது” என்றார்.

இதன் மூலம் உங்களுக்கு எந்த அறிவுரையும் சொல்ல வரவில்லை. சர்புதின் சமீபத்தில் என்னை பாதித்தவர் என்பதைச் சொல்வது மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.

இப்போது பேசுவோம்.

முன்னொரு காலத்தில்
பேச முடியாமலும் பேச மறுத்தும்
விடுபட்டு போன வார்த்தைகள்
அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றன.
வர்ணங்கள் பூசி,
வாசனை திரவியங்கள் தெளித்து
அழகு குலையாமல் அடுக்கி
அந்த வார்த்தைகளை
அரங்கில் வைப்போம்.
முடிந்தால்
ஒரு விற்பனை பிரதிநிதியை நிறுத்தி வைப்போம்.
புதைக்கப்பட்டவர்களின் வரலாறுகளை எடுத்து
சாட்சிக்கு வைப்போம்.
முன்பு ஆதரவாக பேசியவர்களுக்கு எதிராகவும்
எதிராக பேசியவர்களுக்கு ஆதரவாகவும்
சொற்களை அடுக்கி வைப்போம்.
விற்பனை தந்திரங்களில் அதுவும் ஒன்று.
நிறமற்ற வார்த்தையின் மீதிருப்பது
கண்ணீரின் நிறமென்று
விளம்பரம் செய்வோம்.
குருதியின் நிறம் கொண்ட சொற்கள்
அரிதென்று சொல்லி அதிக விலை வைப்போம்.
யாராவது வருவார்கள்.
நாளை நமது வார்த்தைகள்
நம்முடையதாக இல்லாமல் போகலாம்.

நம்மூரில் நடப்பது போல அரசியல் கட்சிகள் நடத்தி வைக்கும் இலவசத் திருமணங்கள் இந்தியா முழுவதிலும் பிரபலம். மத்திய பிரதேசத்திலும்தான். ம.பி முதல்வர் சிவராஜ் சௌகன் இந்த இலவசத் திருமணங்கள் திட்டத்தால் ரொம்ப புகழ்ப்பெற்றிருக்கிறார். மக்கள் அவரை மிகவும் அபிமானத்துடன் பார்க்கிறார்கள்.

ஆனால் இப்போது சர்ச்சைக்கான காரணம், அப்படி நடக்கும் இலவசத் திருமணங்களில் பங்கேற்கும் மணப்பெண்களின் கன்னித்தன்மையை மற்றும் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்று கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்வது என்று மத்திய பிரதேச அரசு எடுத்திருக்கும் முடிவுதான்.

இதற்கு காரணம், ஜூன் 30 அன்று இது போல 152 இலவசத் திருமணங்கள் நடத்தப்பட்டதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு ஒரு பெண் மயக்கமடைந்து விழுந்திருக்கிறார். பிரசவ வலிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. உடனடியாக திருமணத்தை நிறுத்திய அரசு அதிகாரிகள் அங்கு கூடியிருந்த 152 பெண்களையும் பரிசோதனை பார்த்ததில் 14 பேர் கர்ப்பமாக இருந்தார்களாம்.

இலவச திருமணங்கள் மூலம் கிடைக்கும் 5000 ரூபாய் பணத்தை பெறுவதற்காக கல்யாணம் ஆன சிலர் இது போன்று ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள் அரசு அதிகாரிகள். ஆனால் சில இடைத்தரகர்கள் இதன் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கிட்டத்தட்ட 90,000 இலவச திருமணங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. அவற்றில் பல போலி என்று இப்போது சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது. அதை சரி செய்யவே இப்படி ஒரு அதிரடி முடிவு.

இப்போது எனக்கு சில கேள்விகள்.

திருமணமான பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் அது போலி என்றால் அது திருமணமான ஆண்களுக்கும்தானே பொருந்தும்?

பெண்கள் கன்னித்தன்மை வாய்ந்தவர்களா என்று கண்டறிந்துவிடும் அரசாங்கம், ஆண்களின் கன்னித்தன்மைக்கு எந்தவிதமான பரிசோதனைகளை மேற்கொள்ளும்?

அல்லது திருமணத்திற்கான சான்று ஆண்களிடம் இருக்காது என்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறதா?

உண்மையிலேயே போலித் திருமணங்களை தடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் அதற்கு வேறு வழியே இருக்காதா?

இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பதன் மூலம் பெண்களை அவமானப்படுத்துகிறோம் என்று பெண்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணாதிக்க அரசியல்வாதிகளின் மூளைக்கு எட்டவே எட்டாதா?

வெறும் 5000 ரூபாய் பணத்துக்கு ஒரு பெண் அல்லது ஒரு ஆண் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார் என்றால் அவருடைய குடும்பப் பொருளாதார பின்னணி எந்த நிலையில் இருக்கும்? இதை சரி செய்ய முயற்சி எடுக்காத அரசு, இலவசத் திருமணம் போன்ற ஜனரஞ்சகத் திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது எந்தவிதத்தில் நியாயம்?

கடைசியாக, ஒரு சந்தேகம். இவர்களையெல்லாம் நாம் தேர்ந்தெடுக்கதான் வேண்டுமா?

கடைசித் தகவல்: இப்போது பெண்ணியவாதிகள் பலர் இந்தத் பரிசோதனை முயற்சிகளை கடுமையாக எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்ணிய அமைப்புகளும் இந்த பிரச்னையை கையிலெடுத்திருக்கின்றன. விரைவில் இந்த பிரச்னைக்கு முடிவு வரும் என்று நம்புவோம்..

ராபியா பாஸ்ரி 700களில் ஈராக்கில் வாழ்ந்த ஒரு பெண் கவிஞர். முதல் சூபிக்களில் ஒருவராக இவர் இருக்ககூடும் என்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் வந்த இன்னொரு கவிஞர். தனது காலத்தின் முக்கிய மதத்தலைவர்களுக்கு குருவாக ராபியா இருந்தார் என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லாத காலத்தில் பக்தியின் வழி சுதந்திரத்தை அடைய முனைந்தார்கள் என்பதற்கு ஆண்டாள், மீரா, லல்லா போல ராபியாவும் ஒரு சான்று.  மீரா, ஆண்டாள் போல தெய்வீக காதலை இஸ்லாத்தில் அறிமுகப்படுத்தியவர் இவர் என்று சொல்லப்படுகிறது.  சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகள்.

ராபியா...

எனது இறைவன், எனது கடவுள்

விழிகள் அமைதியை நாடுகின்றன,

நட்சத்திரங்கள் மூடிக்கொள்கின்றன.

சன்னமாக இருக்கிறது,

அதனதன் கூடுகளில் இருக்கும் பறவைகளில் ஒலிகள்.

அலைகளின் வாழும் அசுரர்களின் சப்தங்களும்.

மாற்றங்கள் அறியாத மிகப்பெரியவன் நீ.

நிலை மாறாத சமன் நீ.

மறைந்துவிடாத அழிவின்மை நீ.

அரசர்களின் கதவுகள் இப்போது தாழிடப்பட்டிருக்கின்றன,

அவற்றை படையினர் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உன்னை தேடி வருபவர்களுக்காக

உனது கதவுகள் திறந்திருக்கின்றன.

எனது கடவுளே,

இப்போது எல்லோரும் அவரவர் காதலர்களுடன் தனித்து இருக்கிறார்கள்.

நான் உன்னுடன் தனித்து இருக்கிறேன்.

———————————

நரகம் பற்றிய பயத்தில்

உன்னை வணங்கினால்

என்னை நரகத்தில் தீயிலிடு.

சுவர்கத்தின் மீதான ஆசையில்

உன்னை வணங்கினால்

சுவர்கத்தில் வைத்து என்னை பூட்டிவிடு.

உன்னை உனக்காக மட்டுமே

வணங்குவேனென்றால்

உனது முடிவில்லாத அழகை

எனக்கு மறுத்துவிடாதே..

———————————————

உன்னுடைய ஒரு பகுதி

எங்கே செல்கிறதோ

மீதி அங்கு வந்து சேரும்,

நேரத்தைப் பொறுத்து..

———————————-

நீ உன்னை ஒரு ஆசிரியன் என்கிறாய்

அதனால் கற்றுக் கொள்.

————————————-

நான் கடவுளை நேசித்துக் கொண்டிருக்கிறேன்.

சாத்தானை வெறுக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை.

——————————————-

ஒரு கையில் விளக்கையும்

மற்றொரு கையில் ஒரு வாளி தண்ணிரையும் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

சுவர்கத்தை தீயிலிட்டு,

நரகத்தின் மீதான தீயை அணைக்கப் போகிறேன்.

கடவுளை நோக்கிப் பயணிப்பவர்கள்

திரை விலக்கி

உண்மையை பார்க்கட்டும்.

——————————————-

யாரையாவது திறக்கச் சொல்லி மன்றாடி

எவ்வளவு காலம்தான் திறந்த கதவை

தட்டிக்கொண்டிருப்பாய்?

முதலில் ஒரு பிரகடனம். நான் ஒரு பெண்ணியவாதி. இதை சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் 498A என்கிற சட்டத்தால் பல குடும்பங்கள் உடைந்து வருவதை கடந்த சில காலமாகவே நான் கேள்விப்பட்டு வருகிறேன். இந்த சட்டத்தின் கீழ் வரதட்சணை  புகார் ஒரு பெண் கொடுத்தால் எந்தவித விசாரணையும் இன்றி புகார் கொடுக்கப்பட்டவர்களை கைது செய்ய முடியும். அதிலும் ஜாமீன் கிடைக்காத வழக்குகளில் கைது செய்ய முடியும். இதனால் பல குடும்பங்கள் உடைந்து வருகின்றன. நடிகர் பிரசாந்தின் மனைவி இந்த சட்டத்தின் கீழ்தான் பிரசாந்த் மீது புகார் அளித்தார். பிறகு அந்த வழக்கே திசை மாறி போனது. இது குறித்து நான் ஒரு கட்டுரை எழுத முற்பட்ட போது பல பாதிக்கப்பட்ட ஆண்களை பார்க்க முடிந்தது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சீரியலில் ஒரு மனைவி தனது கணவனிடம் வீடு வாங்கவிட்டால் வரதட்சணை கொடுமை என்று புகார் தரப்போவதாக மிரட்டுகிறார். இப்படி பதிவாகும் பல குற்றசாட்டுகளில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் சில குற்றசாட்டுகளிலாவது வேறு நோக்கங்களுக்காக அதை பதிவு செய்வது நடக்கிறது.
இந்த 498A என்கிற சட்டம் அறிமுகப்படுத்தப்படும் போது நிச்சயம் நல்ல நோக்கங்கள் இருந்திருக்க கூடும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் எந்தவிதமான நேரக்கடத்தலும் இருக்க கூடாது என்று சட்ட வல்லுனர்கள் நினைத்திருக்கலாம்.  இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் (குறிப்பாக குடும்ப வன்முறைகள்) குறைந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. குடிகார கணவர்களிடம் மாட்டிக் கொண்டு அன்றாடம் அடிவாங்கும் சமூகத்தின் அடித்தட்டு பெண்கள் சிலரிடம் நான் கேட்டபோது இப்படியொரு சட்டம் இருப்பதே அவர்களுக்கு தெரியவில்லை.
அப்படியென்றால் இந்த சட்டம் போய் சேர வேண்டியவர்களை சரியாக சேரவில்லை என்றுதானே அர்த்தம். பல சட்டங்கள் போல இதுவும் துஷ்ப்ரயோகம் செய்பவர்களின் கைகளில் போய் சிக்கியிருக்கிறது.
உடனடி தேவை, உண்மையில் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு. பிறகு இந்த சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படாதவாறு பாதுகாப்பு. என்ன சொல்கிறீர்கள்?

பழைய பதிவுகள் »